Wednesday, June 24, 2009

தற்பெருமை - 2

ஒரு தடவை முல்லா ஒரு குளக்கரை ஒரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் இருந்த ஒரு கல் தடுக்கி குளத்தில் விழ அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு மனிதர் பாய்ந்து வந்து முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றினார்.

முல்லா அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஆனால் முல்லாவைக் காப்பாற்றியவரோ சும்மா இருக்கவில்லை. முல்லாவை எந்த இடத்தில் யாருக்கு நடுவே சந்தித்தாலும் குளத்தில் விழ இருந்த முல்லாவை நான்தான் காப்பாற்றினேன் என்று சொல்ல தொடங்கிவிட்டார்.

அவருடைய தற்பெருமைப் பேச்சைக் கேட்டுக் கேட்டு முல்லாவுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. அவருக்கு தகுந்த நேரத்தில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

ஒரு நாள் பழைய குளக்கரைப் பக்கம் ஜன நடமாட்டம் அதிகமாக இருந்தது. அந்தப் பக்கம் வந்த முல்லா அந்த தற்பெருமைக்காரர் குளக்கரையில் யாரோ ஒருவருடன் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

திடீரென முல்லா குளத்தினுள் பாய்ந்து விட்டார்.

முல்லா குளத்தில் விழுந்து விட்டார் என நாலாபுறமிருந்த மக்களிடமிருந்து கூக்குரல் எழுந்தன.

பலர் முல்லாவைக் காப்பாற்றுவதற்காக குளத்தில் இறங்கினர்.

முன்னர் முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றியவரும் அவசர அவசரமாகக் குளத்தில் இறங்கினார்.

முல்லாவோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் குளத்தில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.

முல்லாவுக்கு நீந்தத் தெரியும் என்ற விஷயம் இதுவரை யாருக்கமே தெரியாது.

முல்லா முன்னர் தம்மைக் காப்பாற்றியதாக தற்பெருமை பேசும் மனிதரைச் சுட்டிக் காண்பித்து என் அருமை நண்பரை உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்த நினைக்கிறேன். நீந்தத் தெரிந்த என்னை இந்தக் கனவான் ஒரு தடவை நீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றி பேருதவி செய்தார் என்றார்.

முல்லா

ஒரு தடவை முல்லா ஒரு திருமணத்திற்க்கு சென்றார்.
பல முறை அவர் திருமணங்களுக்கு சென்று திரும்பி வரும் போது
அவரது செருப்பு காணாமல் போய்விட்டது.

அதனால் இந்த திருமண வீட்டில் செருப்பை வெளியில் வெட்டுச் செல்ல
முல்லாவிற்க்கு மனம் வரவில்லை.

செருப்புக்களை இழக்க விரும்பாத முல்லா அதனை யாருக்கும்
தெரியாதவாறு ஒரு துணியில் சுற்றி கையில் வைத்துக் கொண்டார்.

முல்லாவின் கையில் ஏதோ பொட்டலம் இருப்பதைப் பார்த்த திருமண
வீட்டுக்காரர், “முல்லா
அவர்களே ஏதோ பொட்டலம் வைத்திருக்கிறீர்களே,
அதில் என்ன இருக்கிறது?

மணமகனுக்கு அளிக்க வேண்டிய பரிசா? என்று கேட்டார்.
“இதுவா, இது மிகவும் புனிதமான வேதாந்த நூல்” என்று முல்லா சமாளித்தார்.

“வேதாந்த நூலா? இதை எங்கே வாங்கினீர்கள்?”
என்று திருமண வீட்டுக்காரர் கேள்விகளை
அடுக்கிக் கொண்டே போக எரிச்சலான முல்லா பதிலளித்தார்,

“செருப்புக் கடையில் வாங்கினேன்”.

எது அழகு

எது அழகு

தத்துவ ஞானி சாக்ரடீஸிடம் ஒரு முறை, ''எது அழகு?'' என்று கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு சாக்ரடீஸ் தந்த பதில்: ''பானையில் உணவு இருக்கிறது. அதை எடுக்க உதவுவது எது? தங்கக் கரண்டியா... மர அகப்பையா? எது பயனுள்ளதாக இருக்கிறதோ, அதுவே அழகு என்றாராம்”.

Monday, June 22, 2009

புகழ்

புக்கர் டி வாஷிங்டன் என்ற அமெரிக்க புரொபசர், எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். இவர், பிரபலமாகாத காலகட்டம். ஒருமுறை, அருகிலிருந்த தேவாலயத்துக்குச் சென்றார் புக்கர் டி வாஷிங்டன். கறுப்பினத்தவர் என்பதால், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். ''நீங்கள் என்னை உள்ளே விடாவிட்டால் பரவாயில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கடவுள் எனக்குச் சொல்வார்'' என்று கூறிவிட்டுத் திரும்பினார் அவர். காலங்கள் நகர்ந்தன. புக்கர் டி வாஷிங்டன் எழுதிய பல புத்தகங்கள், அவருக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தன. சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அந்த தேவாலயத்துக்குச் சென்றார் அவர். அப்போதும் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காதவர்கள், ''என்ன... கடவுள் ஏதாவது சொன்னாரா?'' என்று அவரது பழைய வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டு, ஏளனமாகக் கேள்வி கேட்டனர்.


உடனே புக்கர் டி வாஷிங்டன், ''இப்போது, நான் உங்களைப் பார்க்கவே வந்தேன். சர்ச்சுக்கு வரவில்லை. ஏனென்றால், கடவுள் என்னிடம், 'நானே அந்த சர்ச்சுக்கு செல்வதில்லை. நீ ஏன் செல்கிறாய்?' எனக் கேட்டு விட்டார்'' என்றாராம்

Saturday, June 20, 2009

தற்பெருமை

விஞ்ஞானி ஒருவர், தன்னைப் போலவே அச்சாக பல மனிதர்களை உருவாக்கும் நுட்ப்பத்தைக் கண்டறிந்தார். அதன்படி அவர் உருவாக்கிய நகல்களுக்கும் அசலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை! ஒரு நாள், தன் உயிரைக் கவர்ந்து செல்ல எமதர்மன் வரப் போகிறான் என்பதை அறிந்தார் விஞ்ஞானி. ஏற்கனவே தான் உருவாக்கி வைத்திருந்த ஒரு டஜன் நகல் மனிதர்களுக்கு நடுவில் போய் நின்று கொண்டார்.

பூலோகம் வந்த எமதர்மன், உருவத்தில் விஞ்ஞானியைப் போன்றே இருக்கும் பதின்மூன்று பேரில் உண்மையானவர் யார் என்பதை அறிய முடியாமல் குழம்பிப்போனார். வெறுங்கையுடன் திரும்பினான். மரணத்தை வென்று விட்டதாகக் குதூகலித்தார் விஞ்ஞானி. இருப்பிடம் திரும்பிய எமதர்மன் நன்கு யோசித்தான். அவன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது. பாசக்கயிற்றுடன் பூலோகம் வந்தவன், விஞ்ஞானியின் இடத்தை அடைந்தான்.

''ஐயா! நீங்கள் பேரறிஞர்தாம். உங்களைப் போலவே ஒரு டஜன் உருவங்களைச் செய்து விட்டீர்கள். ஆனால். ஒரே ஒரு குறை...'' என்றான். விஞ்ஞானிக்குப் பொறுக்கவில்லை. ''என்ன குறை கண்டீர்?'' என்று எமதர்மனின் கைகளைப் பிடித்துக் கேட்டார். உடனே எமதர்மன், ''தற்பெருமை என்ற குறைதான். வாருங்கள் எமலோகத்துக்கு'' என்று விஞ்ஞானியை இழுத்துச் சென்றான்.



படிப்பாலும் கல்வியாலும் வருகிற அகங்காரம் மற்றவர்களின் அறிவால் இது வெறும் அறியாமையே என்று உணர்த்துகையில் தான் நாம் நம்மையே உணர்கிறோம்.